உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 10 மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி

10 மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி

சிவகங்கை:-சிவகங்கை அருகே பாப்பாக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் 10 மாத பெண் குழந்தைக்கு பூச்சி மருந்து கொடுத்து தந்தை தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாப்பாக்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் பம்பையன் 28. இவருக்கும் சாலுாரைச் சேர்ந்த சுமதிக்கும் 24, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகன், 10 மாதத்தில் மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக பிரச்னை இருந்தது. இதில் கோபமடைந்த சுமதி 10 மாத பெண் குழந்தையுடன் கொலுஞ்சிப்பட்டியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 10:00 மணிக்கு கொலுஞ்சிப்பட்டிக்கு சென்ற பம்பையன் மனவியிடம் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு பாப்பாகுடியில் உள்ள தன் தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அங்கு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை