வெளிநாடு வேலை என ரூ.22.50 லட்சம் மோசடி
சிவகங்கை:வேலைக்காக வெளிநாடு அனுப்புவதாக கூறி, 22.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார், மாதவா நகர் வீரபாண்டியன் மகன் கார்த்திக்ராஜா, 27. இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்தார். காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் விஸ்வா என்ற கந்தகுரு மற்றும் திருப்புத்துார் ராஜ்கபூரை அணுகினார். அவர்கள் கூறியதை நம்பிய கார்த்திக்ராஜா உள்ளிட்ட 15 பேர், வெளிநாட்டில் வேலைக்காக, அவர்களிடம் 2024 ஆக., 13ல் 22 லட்சத்து 50,000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை பெற்ற அவர்கள், வேலை வாங்கித்தராமல் ஏமாற்றினர். பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கார்த்திக்ராஜா புகார் அளித்தார். மோசடி செய்த இருவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.