சிவகங்கையில் பஸ் வசதி இல்லாமல் அரசு கல்லுாரி மாணவிகள் தவிப்பு
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி இல்லாததால் மாணவிகள் காலை மாலை 2 கிலோமீட்டருக்கு மேலாக நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவிகள் படிக்கின்றனர்.கல்லுாரியில் 13 இளங்களை பாடப்பிரிவும் 7 முதுகலை பாடப்பிரிவும் உள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட கிராமபுற மாணவிகள் தான் அதிகம் படிக்கின்றனர். கல்லுாரி காலை 9:30 மணிக்கு ஆரம்பித்து மாதியம் 2:30 மணிக்கு முடிகிறது. கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவிகள் அதிகாலை புறப்பட்டு நகர் பஸ்களில் சிவகங்கை வரவேண்டிய சூழல் உள்ளது. இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சிவகங்கை வரும் மாணவிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை நேரத்தில் 2 கிலோமீட்டருக்கு மேல் கலெக்டர் அலுவலக ரோட்டின் வழியாக நடந்து செல்லகின்றனர்.அதேபோல் மதியம் கல்லுாரி விடும் போதும் மதிய வெயிலில் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்து பஸ் ஏறும் சூழல் உள்ளது.மாவட்ட நிர்வாகம் 2500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்ற அரசு கல்லுாரிக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லுாரி மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.