உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமாக தப்பி வந்தவர்கள் அதிகரிப்பு

வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமாக தப்பி வந்தவர்கள் அதிகரிப்பு

மதுரை நகருக்கு வெகு அருகாமையில் திருப்புவனம் நகரம் அமைந்துள்ளது. மதுரை நகரின் கட்டுமான தேவைக்கு திருப்புவனம் பகுதியில் இருந்துதான் செங்கல்கள், சித்துகல்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக மதுரை மாவட்ட எல்லையை ஒட்டி 30க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.இதில், ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இது தவிர கீழடி, கொந்தகை, பசியாபுரம், அகரம், மணலூர், காஞ்சிரங்குளம், பூவந்தியில் 100க்கும் மேற்பட்ட கிரானைட் பாலிஷ், செங்கல் தயாரிப்பு தொழிற்சாலைகள் பலத்த பாதுகாப்புடன் செயல்படுகின்றன.இந்த தொழிற்சாலைகளினுள் சாதாரணமாக யாரும் செல்லவே முடியாது. சுற்றிலும் வேலி, பிரம்மாண்டமான கதவுகள் என பலத்த பாதுகாப்புடன் செயல்படுகின்றன. இவற்றில் உள்ளுர் நபர்கள் யாரும் பணிபுரிவதே இல்லை. வாட்ச்மேன், மேலாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளில் மட்டுமே உள்ளுர் நபர்கள் பணிபுரிகின்றனர்.இங்கு பெரும்பாலும் வடமாநில, வங்க தேசத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் அதிகளவில் தங்கி வேலை பார்க்கின்றனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்டவிரோதமாக தப்பி வந்தவர்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.கிரானைட் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் பற்றிய எந்த விபரமும் தொழிற்சாலை உரிமையாளர்கள், அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் இருப்பதில்லை.கிரானைட் பாலிஷ், செங்கல் சேம்பர் உள்ளிட்டவற்றிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் திருப்புவனம் பகுதியில் இதுவரை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்ததாக எந்த தகவலும் இல்லை.செங்கல் சேம்பர்களில் மிக உயரத்தில் புகை போக்கிகள் அமைக்க வேண்டும். வெளியாகும் புகையில் கார்பனும் குறிப்பிட்ட அளவை தாண்ட கூடாது என்பது விதி. நடைமுறையில் அதனை மீறி செங்கல் சேம்பர்கள் செயல்படுகின்றன. திருப்புவனம் வட்டார செங்கல் சேம்பர்கள், தோட்டங்களில் வேலை செய்ய வெளிமாநில நபர்களை அழைத்து வர ஏராளமான புரோக்கர்கள் உள்ளனர். இங்கு தங்கி பணிபுரிபவர்கள் இரவில் வெளியேறி மீண்டும் இரவிலேயே தங்கும் இடத்திற்கு வருகின்றனர். தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர் உள்ளிட்டவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால் திருப்புவனம், பூவந்தி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய எந்த விபரமும் இல்லை. ஆண்டு முழுவதும் செங்கல் தயாரிப்பு நடந்த வண்ணம் உள்ளது. இவர்களுக்கு தேவைப்படும் சவடு மணல் எங்கிருந்து கிடைக்கிறது என்பதே கேள்வியாக உள்ளது. குறைந்த சம்பளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தகர ஷெட்களில் தங்கி பணிபுரிகின்றனர். இவர்களுடன் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் தங்கியிருப்பதாக தெரிகிறது. திருப்புவனம் தாலுகாவில் மட்டும் 3,000 வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம், திருப்புவனம், பூவந்தியில் செயல்படும் செங்கல் சூளைகள், கிரானைட் ஆலை, தோட்டங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய ஆய்வு செய்து, மாநிலத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி