தலைமையாசிரியர் இல்லாமல் அரசு பள்ளிகள் தள்ளாடுகிறது; பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வி பாதிப்பு
சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 37,554 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 1132 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அதில் 130க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை. பின்தங்கிய பகுதியான எஸ்.புதுார் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 60 பள்ளிகளில் 20 பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களே காலியாக உள்ளது.பள்ளியின் மூத்த ஆசிரியரே தலைமையாசிரியர் பணியையும் கூடுதலாக கவனிப்பதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதுடன் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி சில ஆண்டுகளாகவே தலைமையாசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்கவில்லை. இதன் காரணமாகவே பல பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாமல் இயங்குகிறது. அப்பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய இயலாது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.முத்துப்பாண்டியன் கூறியதாவது: தொடக்கக்கல்வித் துறையில் 12 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனம் நடக்கவில்லை. நீதிமன்ற வழக்கு காரணமாக பதவி உயர்வு பெற முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு நிலுவையில் உள்ளது.இதையே காரணம் காட்டி பதவி உயர்வு வழங்காமல் தொடக்க கல்வி துறை இழுத்தடிக்கிறது. வழக்குகளை விரைந்து முடிக்க அரசு முன் வர வேண்டும். இல்லையேல் அரசு கொள்கை முடிவெடுத்து ஆசிரியர் நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மேலும் அரசாணை 243 அமல்படுத்தியதன் விளைவாக சில மாவட்டங்களில் மிக அதிகமான காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அளவில் இருந்த முன்னுரிமை மாநில அளவிற்கு மாற்றப்பட்டது. பொதுவாக கிரமப்புறங்களில் அதிக அளவு பள்ளிகளை கொண்ட தொடக்கக்கல்வி துறையில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை பேணப்படுவது தான் சிறந்தது.அப்பொழுது தான் கிராமங்களை விட்டு நகர்புறங்களை நோக்கி ஆசிரியர்கள் செல்லமாட்டார்கள். தற்பொழுது இந்த அரசாணை மூலம் எஸ்.புதுார் போன்ற பின்தங்கிய ஒன்றியங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.இது தொடக்கக்கல்வித் துறையில் ஒரு கற்றல் சமமின்மையை உருவாக்கியுள்ளது. எனவே ஆசிரியர், மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243ஐ ரத்து செய்து மாறுதல் கலந்தாய்வை நடத்துவதுடன், ஆசிரியர் பணி நியமனங்களையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.