காரைக்குடி அழகப்பா பல்கலையில் 113 பேராசிரியர் பணியிடங்கள் காலி தகவல் அறியும் சட்டம் மூலம் பதில்
சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலையில் 113 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.காரைக்குடி அழகப்பா பல்கலையில் 55 துறைகளின் கீழ் பேராசிரியர், இணை பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், சான்றிதழ் படிப்புகளை படித்து வருகின்றனர். தொலைதுார கல்வி மையம் மூலமும் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர்.பல்கலையில் பெரும்பாலான துறைகளில் பேராசிரியர், இணை பேராசிரியர் காலிபணியிடம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் 2010ல் இருந்து 2024 வரை இடஒதுக்கீடு படி நியமித்துள்ள பேராசிரியர், இணை பேராசிரியர் விபரங்களை கேட்டிருந்தார். இதற்கு பல்கலை துணை பதிவாளரும், பொது தகவல் அலுவலருமான பி.லட்சுமி அளித்த பதிலில், 2010 முதல் 2015 வரை இடஒதுக்கீட்டின்படி 10 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே நேரம் 2011, 2014, 2016 முதல் 2024ம் ஆண்டுகளில் பல்கலையில் நேரடி நியமனம் மூலம் பேராசிரியர் பணியிடங்கள் நியமிக்கவில்லை.இப்பல்கலையில் தற்போது பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 113 காலிபணியிடங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.கருப்பசாமி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளிலும் இடஒதுக்கீடு படி எத்தனை பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தகவல் கேட்டுள்ளேன். தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலையில் இருந்து மட்டுமே பதில் வந்துள்ளது, என்றார்.