திருப்புவனத்தில் படுகை அணை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு
திருப்புவனம்: வைகை ஆற்றில் கட்டப்பட்டு வரும் படுகை அணையை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்.பழையனுார் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் வலது புறத்தில் இரண்டு ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பழையனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கானுார் கண்மாய்க்கு இடது புறம் நான்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.கானுார் கால்வாய் மூலம் மூவாயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். படுகை அணை கட்டுமான பணிகளை சிவகங்கையில் முதல்வர் தொடங்கி வைத்தார். 18 மாதங்களில் பணி நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் சற்று முன்னதாகவே நிறைவு பெற உள்ளது. கட்டுமான பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டார். உதவி கோட்ட பொறியாளர் மோகன்குமார் விளக்கமளித்தார். உதவி பொறியாளர்கள் சுரேஷ்குமார், வினோத்குமார், அழகுராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.