ரோட்டில் திரிந்த மாடுகளால் சிவகங்கையில் ஒருவர் பலி
சிவகங்கை : சிவகங்கையில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயத்தில் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் செய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரோட்டில் திரிந்த மாட்டின் மீது மோதி ஒருவர் பலியானார். சிவகங்கையில் மதுரை - தொண்டி ரோடு, மேலுார் ரோடு, திருப்புத்துார் ரோடு, காந்திவீதி, மஜித்ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஒட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர். இரவில் மாடுகள் சென்டர் மீடியனில் ரோட்டில் அப்படியே படுத்து கிடக்கிறது. வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கண்டாங்கி பட்டியை சேர்ந்த தவக்குமார் 37. காந்திவீதியில் உள்ள காய்கறி கடையை அடைத்துவிட்டு இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு மேலுார் ரோட்டில் சென்றார். கால்நடை மருத்துவமனையை தாண்டி சென்ற போது ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் மாட்டின் மீது மோதி தவக்குமார் கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பரிசோதித்ததில் தவக்குமார் இறந்ததாக தெரிவித்தனர். தவக்குமார் மனைவி தனம் விபத்து குறித்து நகர் போலீசில் புகார் அளித்தார்.