ஆலம்பச்சேரி தனி ஊராட்சி கலெக்டரிடம் மக்கள் மனு
சிவகங்கை: மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் மேலநெட்டூர் ஊராட்சியின் கீழ் மேலநெட்டூர், கீழகுடியிருப்பு, ஆலம்பச்சேரி, டி.பி., ஆலங்குளம், காக்குடி, அய்யனுார், வண்ணானோடை, புத்தனேந்தல் கிராமங்களின் மக்கள் தொகை 3541 பேர் உள்ளனர். இந்த ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 2141. தற்போது ஆலம்பச்சேரி கிராமத்திற்கு அருகில் உள்ள இளையான்குடி ஒன்றியம், கீழநெட்டூர் ஊராட்சியில் இருந்து விடுவிப்பதென தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே மக்கள் தொகை, கூடுதல் வாக்காளர்கள் இருப்பதை கணக்கிட்டு ஆலம்பச்சேரியை தலைமையிடமாக கொண்டு ஆலம்பச்சேரி, பி.ஆலங்குளம், கோவானுார், கணபதியேந்தல், செம்பனேந்தல்ஆகிய கிராமங்களை இணைத்து தனியாக ஆலம்பச்சேரி ஊராட்சியை ஏற்படுத்த வேண்டும். இங்கு புதிய ஊராட்சி துவக்குவதற்கு தேவையான கட்டமைப்பு, பள்ளிகள், நுாலகம், சமுதாயக்கூடம், ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, கலையரங்கம், மகளிர் குழு கட்டடம் ஒரே வளாகத்தில் உள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் ஆலம்பச்சேரியை தலைமையிடமாக கொண்டு தனி ஊராட்சி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.