வைகை ஆற்றில் மணல் திருட்டு; உருவாகும் மெகா பள்ளங்கள்
திருப்புவனம்; திருப்புவனம் வைகை ஆற்றில் தலைச்சுமையாக மணல் திருடப்படுவதால் மெகா பள்ளங்கள் உருவாகி உள்ளன. திருப்புவனம் வைகை ஆற்றை நம்பி விவசாயம் , குடிநீர் திட்ட கிணறுகள் உள்ளன. வைகை ஆற்றில் பருவ மழை காரணமாகவும் வைகை அணையில் இருந்து நீர் திறப்பின் காரணமாகவும் நீர் வரத்து உண்டு. வருடத்தில் அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை வைகை ஆற்றில் நீரோட்டம் இருக்கும். இதனை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் முழுவதும் வைகை ஆற்றினுள் தலைச்சுமையாக மணல் அள்ளி வந்து சாக்கு பைகளில் கட்டி சாலையோரம் அடுக்கி வைத்து இரவில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேனில் ஏற்றி அனுப்பி வருகின்றனர். மணல் திருட்டு காரணமாக வைகை ஆற்றின் பல இடங்களில் மெகா பள்ளங்கள் உருவாகி உள்ளன. பாலங்கள் அருகில் மணல் திருடப்படுவதால் பாலங்களின் தாங்கு திறனும் பாதிக்கப்படுகிறது. திருட்டை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.