குறைந்த நீர் தேவையுள்ள உளுந்து எள் சாகுபடிக்கு மானியம் வழங்கல்
சிவகங்கை: அதிக நீர் தேவையுள்ள நெல், கரும்பு, வாழை பயிர்களுக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுள்ள உளுந்து,எள் பயிர் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.இம்மாவட்டத்தில் மாற்று பயிராக உளுந்து 100 ஏக்கர், எள் 50 ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு வைத்துள்ளனர். உளுந்து சாகுபடி செய்தால் விதை 8 கிலோ, டிரைகோடெர்மா விரிடி 1 கிலோ, திரவ உயிர் உரம் 1 லிட்டர், இலைவழி டி.ஏ.பி., கரைசல் தெளிக்க இரண்டு முறை தெளிப்பதற்கான கூலி ரூ.1000 என மொத்தமாக ரூ.2500ல் 50 சதவீத மானியமாக ரூ.1250 வழங்கப்படுகிறது.எள் பயிர் சாகுபடி செய்தால்விதை 2 கிலோ, டிவிரிடி 1 கிலோ, திரவ உயிர் உரம் 1 லிட்டர், மாங்கனீசு சல்பேட் 1 கிலோ, இடை, உழவு பணி மற்றும்அறுவடை மானியம் 4 வேலை ஆட்களுக்கு ரூ.1600 என மொத்தமாக ரூ.2696ல் ரூ.1250யை மானியமாக வழங்கப்படும். எனவே விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். இதில் பெண் விவசாயிகளுக்கு 33 சதவீதம் வரை முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.