தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப் புறக்கணிக்கும் டவுன் பஸ்கள்
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பில் அரசு டவுன் பஸ்கள் நிற்க மறுப்பதால் பொதுமக்களும் அலுவலர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் புதுாரை அடுத்து தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தினுள் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், நில அளவை துறை அலுவலகம் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.இதுதவிர ஆதார் பதிவு உள்ளிட்டவைகளும் நடைபெறுகின்றன. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 173 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினசரி தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தினுள் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தாலுகா அலுவலகத்தை கடந்து தான் லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, பழையனூர், ஓடாத்தூர், இடைக்காட்டூர், வெள்ளிக்குறிச்சி செல்லும் டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்த ஊழியர்கள் மறுக்கின்றனர்.இதிலும் குறிப்பாக காலை நேரத்தில் சிவகங்கையில் இருந்து ஓடாத்தூர் வரும் பஸ்சில் தாலுகா அலுவலக ஊழியர்கள் அதிக அளவில் வருவர். இவர்களை திருப்புவனத்திலேயே இறக்கி விடுவதால், பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் என பலரும் ஷேர் ஆட்டோவில் பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டியுள்ளது.பல முறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தாலுகா அலுவலக பஸ் ஸ்டாப்பை புறக்கணிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.