சிங்கம்புணரியில் தயாராகும் ஜல்.. ஜல்... சலங்கை
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்காக தயாரிக்கப்படும் சலங்கைகளை வாங்க மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் குவிகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் தைப்பொங்கல் முதல் தொடர்ச்சியாக நடைபெறும் மஞ்சுவிரட்டின் போது காளைகளுக்கு அலங்கார சலங்கை அணிவித்து அவிழ்ப்பது வழக்கம். இதற்காக பல்வேறு ஊர்களில் சலங்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் சலங்கைகளுக்கு சுற்றுவட்டார மாவட்டங்களில் நல்ல கிராக்கி உள்ளது. இந்த சலங்கைகளை தலைமுறையாக சில குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். ஒருகாலத்தில் மஞ்சுவிரட்டுகளில் பிடிபடாத காளைகளுக்கு மட்டுமே சலங்கைகளை அணிவிப்பர்.திடலில் மணி மாடு வருகிறது என்றால் பல வீரர்கள் ஒதுங்கி விடுவர். தற்போது அனைத்து மாடுகளுக்கும் சலங்கைகளை அணிவிப்பதை காளை உரிமையாளர்கள் பெருமையாக நினைக்கின்றனர். இதனால் சலங்கை தொழில் விரிவடைந்துள்ளது. சலங்கையில் கட்டப்படும் நுால் குஞ்சங்களை தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.ஆனந்த், சலங்கைத் தொழிலாளி: 4வது தலைமுறையாக சலங்கை தயாரிக்கிறோம். ஆண்டு முழுவதும் தயாரித்தாலும் கார்த்திகை முதல் தை வரை மட்டுமே தொழில் முழு வீச்சில் இருக்கும். 1800 முதல் 15,000 ரூபாய் வரை பல வண்ணங்களில் தயாரித்து கொடுக்கிறோம். 4,6,8 அறுவை கொண்ட சாதா மணிகள், கும்பகோணம் மணிகள் உள்ளன.100 ஆண்டுகளுக்கு முன்பு செட்டிநாட்டு வீடுகளில் அலங்காரத்திற்கு பயன்பட்ட அரியக்குடி மணிகளும் புழக்கத்தில் உள்ளன. ஒரு மணியின் விலை மட்டும் ஆயிரம் ரூபாய் வரை போகும். அந்த சலங்கையிலிருந்து வரும் நாதம் மஞ்சுவிரட்டு ஆர்வலர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்.இதனால் விலை அதிகம். விவசாயிகள் காளைகளுக்கு செலவு செய்வதைபெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. புதிய சலங்கை மட்டுமல்லாமல் பழைய சலங்கைகளையும் புதுப்பித்து கொடுக்கிறோம், என்றார்.