உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மறுகால் பாயும் பூவந்தி கண்மாய் மீன் பிடிக்க இளைஞர்கள் ஆர்வம்

 மறுகால் பாயும் பூவந்தி கண்மாய் மீன் பிடிக்க இளைஞர்கள் ஆர்வம்

பூவந்தி: பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரில் மீன்கள் துள்ளி குதிப்பதால் இளைஞர்கள் பலரும் மீன்களை போட்டி போட்டு பிடித்து வருகின்றனர். 750 ஏக்கர் பரப்பளவுள்ள பூவந்தி கண்மாயை நம்பி இரண்டாயிரம் ஏக்கரில் நெல், வாழை, கரும்பு, தென்னை பயிரிடப்படுகிறது. வைகை ஆற்றின் இடது பிரதான கால்வாய் மூலம் பூவந்தி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்படுகிறது தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாகவும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகவும் பூவந்தி கண்மாய் நேற்று காலை நிரம்பி கலுங்கு வழியாக மறுகால் பாய்ந்து வருகிறது. பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வெளியேறும் தண்ணீர் மடப்புரம், ஏனாதி, கணக்கன்குடி உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும். பூவந்தி கண்மாயில் கெண்டை, கெழுத்தி, ஜிலேபி, விரால் உள்ளிட்ட மீன்கள் உள்ளன. கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருவதை அடுத்து மீன்கள் தண்ணீரை எதிர்த்து கலுங்கில் பாயும் போது வெளியில் வந்து கூட்டம் கூட்டமாக விழுகின்றன. பூவந்தி - சக்குடி சாலையை ஒட்டி பூவந்தி கண்மாய் கலுங்கு அமைந்திருப்பதால் நேற்று காலை முதல் அந்த வழியாக சென்ற இளைஞர்கள் பலரும் மீன்களை வெறும் கைகளால் பிடித்து சென்றனர். மதுரை மாவட்டத்தில் இன்னும் ஒரு மழை பெய்தால் மறுகால் பாயும் தண்ணீரின் வேகம் கிடுகிடு வென அதிகரிக்கும், மீன்களும் ஏராளமாக வெளியேறும் என்றனர். கடல் மீன்களை காட்டிலும் கண்மாய் மீன்கள் ருசியாக இருக்கும், சிலர் கண்மாய் மீன்களை விரும்பி சாப்பிடுவார்கள், மீன்கள் அதிகளவில் வருவதால் பலரும் மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ