அந்தரங்க வீடியோ மிரட்டல் இளைஞர்களிடம் விசாரணை
காரைக்குடி: காரைக்குடியில் கணவன், மனைவி அந்தரங்க வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடியில் அசோக் நகரை சேர்ந்த தம்பதி வீட்டின் அறையில் தனிமையில் இருந்தனர். ஜன்னல் திறந்திருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர், அதை வீடியோ எடுத்தார். அதை தனது நண்பர்களுக்கு காட்டியதோடு, அவர்களுடன் சேர்ந்து வீடியோவை காட்டி சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினார். இதுகுறித்து அந்தப் பெண், கணவரிடம் தெரிவித்தார். காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 17 வயது சிறுவன் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.