உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 2 ஆண்டுக்கு பின் களிமேடில் அப்பர் சதய விழா விமரிசை

2 ஆண்டுக்கு பின் களிமேடில் அப்பர் சதய விழா விமரிசை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரான அப்பருக்கு மடம் அமைத்து, சித்திரை சதய நாளில் குரு பூஜை, கிராம மக்களால் ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 2022ம் ஆண்டு, அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது மின் கம்பி தேர் மீது உரசியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்து நிகழ்ந்த பிறகு, கடந்தாண்டு, களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதயவிழா நடந்தது. இந்நிலையில், களிமேடு கிராம மக்கள் சார்பில், அப்பர் சதய விழா நேற்று தொடங்கி, மூன்று நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.அதன்படி களிமேடு அப்பர் மடத்தில் நேற்று மங்கள இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து திருமுறை இசையும், அப்பர் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும், மகேஸ்வர பூஜையும் நடந்தது.கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில், சென்னை குன்றத்துார் பிரபாகரமூர்த்தியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.தொடர்ந்து, புதியதாக தயாரிக்கப்பட்ட தேரில், அப்பர் பெருமானின், 300 ஆண்டு பழமையான ஓவியம் மற்றும் அப்பரின் உருவச் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.இன்று, 4ம் தேதி மாலை, பள்ளி மாணவர்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டி, அப்பர் பெருமான் வழிபாடு, பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நாளை, 5ம் தேதி அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை