உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஒழுக்கம் கெட்ட மனைவி மீது ஆத்திரம் 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

ஒழுக்கம் கெட்ட மனைவி மீது ஆத்திரம் 3 குழந்தைகளை கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர்:கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம் பிடித்த ஆத்திரத்தில், தன் மூன்று குழந்தைகளின் கழுத்தையும் அறுத்து கொடூரமாக கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 38; ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தார். இவரது மனைவி நித்யா, 35. இவர்களுக்கு ஓவியா, 12, கீர்த்தி, 8, ஆகிய மகள்களும், ஈஸ்வரன், 5, என்ற மகனும் இருந்தனர். மூவரும் அப்பகுதி பள்ளியில் படித்தனர். இந்நிலையில், நித்யாவுக்கு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுஉள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து, தன் கள்ளக்காதலனுடன் அவர் சென்று விட்டார். இதனால், மதுபோதைக்கு அடிமையான வினோத்குமார், குழந்தைகளை வெறுத்து, அவர்களை அடிக்கடி திட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த வினோத் குமார், ஓவியா, கீர்த்தி ஆகியோரை வீட்டில் இருந்து வெளியே சென்று விளையாடவும், தண்ணீர் எடுத்து வருமாறும் கூறியுள்ளார். பின், ஈஸ்வரனை கொஞ்சுவது போல துாக்கி வைத்து, அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, இரண்டு மகள்களையும் அடுத்தடுத்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிசந்திரன் மற்றும் மதுக்கூர் போலீசார் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை