மனைவி கண் முன்னே கணவர் பஸ்சில் பாய்ந்து தற்கொலை
கும்பகோணம்; வேலையில்லாத விரக்தியில், மனைவி கண் முன்னே பஸ்சில் விழுந்து கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் பிரபாகரன், 34. இவரது மனைவி கோகிலா. இவர், தன் மனைவியுடன், திருச்சி சமயபுரத்தில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அங்கு வேலையில் இருந்து வெளியேறிய பிரபாகரன், தன் மனைவியுடன் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்தார். சரியான வேலை கிடைக்காததால், மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கும்பகோணத்துக்கு வேலை தேடி மனைவியுடன் வந்த அவர், பஸ் ஸ்டாண்டில் தங்கி இருந்தார். தொடர்ந்து நேற்று காலை, பஸ் ஸ்டாண்டிற்குள் தனியார் பஸ் நுழைந்த போது, பிரபாகரன் தன் மனைவி கண் முன்னே பஸ் முன்பக்க சக்கரத்தில் திடீரென பாய்ந்ததில் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்தார். கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.