அறை பூட்டை உடைத்து பதிவாளர் பதவியேற்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக இருந்த தியாகராஜன், பொறுப்பு துணைவேந்தராக உள்ள சங்கர் ஆகியோர், ஒருவரை இன்னொருவர் பதவியில் இருந்து விடுவிப்பதாக, டிச., 27ல் உத்தரவு பிறப்பித்தனர்.இந்நிலையில், துணைவேந்தர் சங்கரால் நியமிக்கப்பட்ட பொறுப்பு பதிவாளரான வெற்றிச்செல்வன் நேற்று காலை பதவியேற்க வந்தார். அப்போது, ஏற்கனவே நீக்கப்பட்ட பதிவாளரான தியாகராஜன், பதிவாளர் அறை சாவியை தர மறுத்தார். மூன்று மணி நேரத்திற்கு பின், பதிவாளர் அறையை உடைத்து, பதிவாளராக வெற்றிச்செல்வன் பதவியேற்றார். குழு உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.தியாகராஜன் கூறியதாவது:நாற்பது பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்டதில் நானும் ஒருவன் என கூறி, பதிவாளர் பதவியில் இருந்து என்னை நீக்கினர். நானும், துணைவேந்தரும் வெளியிட்ட ஆணையை ரத்து செய்துவிட்டு, கூட்டுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுத்து கொள்ளலாம் என தமிழ் வளர்ச்சி செயலர் கூறி இருந்தார். இந்நிலையில், இங்கு நடந்த நிகழ்வுகள் வேதனையாக உள்ளன.துணைவேந்தர் சங்கர், தன்னிச்சையாக சர்வாதிகாரத்தோடு செயல்படுகிறார். அரசு செயலர் வழிகாட்டுதலின்படி பதிவாளராக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.