பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., பாலகிருஷ்ணன் தலைமையில் பட்டுக்கோட்டை, பேரவூரணி தாசில்தார்கள் முன்னிலையில் அனைத்துக்கட்சியினர் கூட்டத்தில் தேர்தல் விதிமுறை பற்றிய விளக்க கூட்டம் நடந்தது. தேர்தலை முன்னிட்டு நகர்பகுதிகளில் விளம்பர தட்டிகள், சுவர்விளம்பரங்கள், நோட்டிஸ் விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய விரும்புபவர்கள் முதலில் மனு கொடுத்தவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். பொதுக்கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அனுமதி வாங்க வேண்டும். பொதுக்கூட்டம் முடிந்த உடன் கொடி, தோரணம் என அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் நில உரிமையாளர்களிடம் அனுமதி கடிதம் வாங்கி விளம்பர தட்டி வைத்துக் கொள்ளலாம், புறம்போக்கு இடங்களில், ஆற்று மதகு, கைப்பிடிசுவர் உள்ளிட்ட பொது இடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது. இந்த உத்தரவுகளை மீறும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் அந்த விளம்பரங்களை அப்புறப்படுத்தியதற்கான செலவு சேர்க்கப்படும்.
மூன்று வாகனங்களில் மட்டுமே வேட்புமனு செய்ய வரலாம், வேட்பாளர்கூட ஐந்து நபர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய மற்றும் பரிசீலனைக்கு கூட செல்லலாம். இதில் உடல் ஊனமுற்றோருக்கு விளக்கு அளிக்கப்படும், கடந்த 19 ம்தேதி வரை கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் மட்டுமே சேர்க்கப்படும், அதன் பிறகு கொடுக்கப்பட்ட பட்டியல்கள் சட்டசபை தேர்தலில் சேர்க்கப்படும். வாகன விளம்பரங்கள் செய்ய போலீஸில் அனுமதி வாங்க வேண்டும். அனுமதி ரசீது உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பட்டுக்கோட்டை நகராட்சியை பொருத்தவரை 54 ஓட்டுச்சாவடிகள் செயல்படும். அதில் 108 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினருக்கு வெவ்வேறு வண்ணங்களில் அடையாள தாள்கள் ஒட்டப்படும், மின்சார கம்பங்களல் விளம்பரம் செய்தல், ரோட்டின் குறுக்காக கயிறில் கட்டிவிளம்பரம் செய்தல், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்களில் வாக்களர்களுக்கு விருந்து வைப்பது போன்ற நிகழ்ச்சி நடந்தால் தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக தகவல் தர வேண்டும். பண பரிமாற்றம், இலவச பொருட்கள் கொடுப்பது போன்ற செயல்கள் செய்ய கூடாது. தனிமனித விமர்சனம், மதஉணர்வுகளை தூண்டும் வகையிலோ காயப்படுத்தும் வகையிலோ பிரச்சாரம் செய்யக்கூடாது, உள்ளூர் 'டிவி' சேனல்களில் அரசியல் விளம்பரம் செய்யக்கூடாது. பட்டுக்கோட்டை தாலுக்காவை பொருத்தவரை தாமரங்கோட்டை, வடக்கு மற்றும் தெற்கு, மகிளங்கோட்டை, ஏரிப்புறக்கரை, பொன்வராயன்கோட்டை, காயாவூர், சேண்டாக்கோட்டை, ஒதியடிக்காடு, நரசிம்மபுரம், சூரப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரே ஓட்டுச்சாவடியில் ஒரே வேட்பாளருக்கு 80 சதவீதற்கும் மேல் ஓட்டுக்கள் பதிவானால் மறுஓட்டுப்பதிவு நடைபெறும். இவ்வாறு ஆர்.டி.ஓ., பாலகிருஷ்ணன் விளக்கமாக கூறினார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் கலந்துகொண்டனர். பட்டுக்கோட்டை பகுதியில் இதுவரை அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.,வுக்கான நகர்மன்ற தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.