மின்சாரம் தாக்கி பணியாளர் பலி போராட்டத்திற்கு பின் உடன்பாடு
உத்தமபாளையம், உத்தமபாளையத்தில் மின்சாரம் தாக்கி பலியான மின்வாரிய ஒப்பந்த பணியாளர் சிவா 28, உடலை வாங்க மறுத்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் ஒப்படைக்கபப்ட்டது. உத்தமபாளையம் பி.டி.ஆர்., காலனி வீதியில், புதிய மின் இணைப்பு வழங்க கம்பங்களை ஊன்றும் பணியில் நேற்று முன்தினம் ஒப்பந்த பணியாளர்கள் 4 பேர் ஈடுபட்டனர். இதில் கோம்பை திரு.வி. க. நகர் குபேந்திரன் மகன் சிவா கீழே நின்று மின் ஒயரை இழுத்து கட்டுவதற்காக தூக்கி வீசியபோது, மின்சாரம் பாய்ந்து பலியானார். அவரது உடல் உத்தமபளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு வழங்க கோரி நேற்று மதியம் அரசு மருத்துவமனை எதிரில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டி.எஸ்.பி. பொன்னரசு, இன்ஸ்பெக்டர் உலகநாதன், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இறந்தவர் உடல் பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.