வெள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு
போடி: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இருவர் உடல்கள் மீட்கப்பட்டன. தேனி மாவட்டம், போடி, பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜஹாங்கீர், 47; போடி யூனியன் வங்கி அலுவலர். நேற்று முன்தினம், இவரும், மதுரை வாகைகுளத்தை சேர்ந்த கொத்தனார் மஜீத், 52, உட்பட, ஏழு பேர், குரங்கணி மேல் பகுதி நரிப்பட்டி சொக்கன் கேணி அருகே குளித்துக் கொண்டிருந்தனர். கேரளாவில் பெய்த கன மழையால், குரங்கணியில் திடீரென காட்டாற்று வெள்ளம் வந்தது. இதில், ஆற்றை கடக்க முடியாமல் ஏழு பேரும் தவித்தனர். துணிந்து கடக்க முயன்ற ஜஹாங்கீர், மஜீத் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். போடி தீயணைப்பு படையினர், ஐந்து பேரை மீட்டனர். ஜஹாங்கீர், மஜீத் உடல்கள், நேற்று காலை, சொக்கன் கேணி அருகே கரை ஒதுங்கின.