குளிர் காற்றுடன் சாரல் மழை சளி, காய்ச்சல் பரவலால் அவதி
கம்பம்: தேனி மாவட்டத்தில் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களுக்கு சளி காய்ச்சல் பரவலால் மக்கள் அவதியடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் மழை குளிர்ந்த காற்றுடன் பெய்து வருகிறது. அதிகாலையில் சாரல் மழை கூடுதலாக உள்ளது. சூரிய வெளிச்சம் இன்றி வானம் மேகமூட்டமாக உள்ளது. இதனால் சளியுடன் கூடிய காய்ச்சல் பரவி வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் காய்ச்சல் பரவுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க கூட்டம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சின்னமனூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஆனால் அதிகளவில் இல்லை. இது சீசன் காய்ச்சல் தான். சின்னமனூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் குணமாக தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளனர். தேவையான அளவு மருந்து மாத்திரைகளும் இருப்பு உள்ளது என்றார்.