உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கார்த்திகை பிறப்பு: மல்லிகை ரோஜா பூக்கள் விலை உயர்வு

 கார்த்திகை பிறப்பு: மல்லிகை ரோஜா பூக்கள் விலை உயர்வு

ஆண்டிபட்டி: இன்று (நவ., 17) கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வரத்துக்குறைவால் மல்லிகை கிலோ ரூ.1000, பன்னீர்ரோஜாப்பூக்கள் ரூ.200 என விலை உயர்ந்தது. ஆண்டிபட்டி ஒன்றியம் கொத்தப்பட்டி, கன்னியப்பப்பிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, திம்மரசநாயக்கனுார், டி.ராஜகோபாலன்பட்டி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மல்லிகை, சுந்தர்ராஜபுரம், ஏத்தக்கோவில், கொப்பையம்பட்டி, புள்ளிமான் கோம்பை, மல்லையாபுரம், ஸ்ரீரங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பன்னீர் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் விளையும் பூக்கள் தினமும் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த வாரத்தில் கிலோ ரூ.300 வரை விற்பனையான மல்லிகை நேற்று ரூ.1000 வரையும், நான்கு நாட்களுக்கு முன் கிலோ ரூ.30 வரை விற்ற பன்னீர்ரோஜாப்பூக்கள் நேற்று ரூ.200 வரையும் விற்பனையாயின. பூ வியாபாரிகள் கூறியதாவது: தொடர் பனியால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. சபரிமலை மண்டல காலத்தில் மல்லிகை 3 முதல் 5 டன் வரை வரத்து இருக்கும். நேற்று 100 கிலோவிற்கும் குறைவாக வரத்து இருந்தது. 1000 கிலோ வரை வரத்து இருந்த பன்னீர் ரோஜாப்பூக்கள் நேற்று 600 கிலோவாக குறைந்தது. வரத்து குறைந்தும், கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதாலும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !