உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாசில்லாத வீட்டை உருவாக்கிய மாடித்தோட்டம் கம்பம் தம்பதிக்கு குவியும் பாராட்டுக்கள்

மாசில்லாத வீட்டை உருவாக்கிய மாடித்தோட்டம் கம்பம் தம்பதிக்கு குவியும் பாராட்டுக்கள்

கம்பம் நாட்டுக்கல் தெருவில் வெங்கட் குமார் - - செல்வராணி தம்பதி வசிக்கின்றனர். இத்தம்பதியினர் தங்களது வீட்டை ஒரு குட்டித் தோட்டமாக பராமரித்து மாற்றியுள்ளனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பூச்செடிகளை மாடியில் வளர்க்க ஆரம்பித்த தம்பதியினர் அதை ஒரு வேலையாக செய்ய துவங்கினர். இவர்களின் வீட்டின் மாடி முழுவதும் மணம் பரப்பும் மலர்கள் , மூலிகைச் செடிகள், அழகிற்காக வளர்க்கப்படும் செடிகள் என அலங்கரிக்கின்றன. அத்துடன் ஜன்னல், மாடிப் படிகள், சுவர்களிலும் ஆணி அடித்து தொட்டி அமைத்து மலர்ச் செடிகள் வளர்த்து வருகின்றனர். வித விதமான கற்றாழை, கள்ளி செடியில் வித்தியாசமான ரகங்கள் நம் கண்களை கவர்கின்றன. வீட்டில் படுக்கையறை, வரவேற்பறை என கிடைக்கும் இடங்களில் எல்லாம் மலர்கள் , மூலிகைகள் வளர்த்து வருகின்றனர்.

ஆக்சிஜன் தரும் லாவெண்டர்

வெங்கட் குமார், இயற்கை ஆர்வலர், கம்பம் : எங்கள் வீட்டின் மாடியில் பூந்தொட்டிகள் சிலவற்றை வாங்கி வைத்து, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சி, பராமரிக்க துவங்கியவுடன் கோபமெல்லாம் பறந்துபோனது. மனது லேசாகி விட்டதை உணர முடிந்தது. மலர்களும், மூலிகை செடிகளும் உயிர் உள்ளவை. மலர்களை ஆத்மார்த்த உள்ளன்புடன் நேசிக்க தொடங்கி, அவற்றை பராமரிக்க துவங்கினால், அவைகள் இயற்கையாக நமக்கு நன்மைகளை தரும். இரவில் துாங்கும் போது நல்ல ஆக்சிஜன் கிடைக்க வீட்டின் படுக்கையறையில் கற்றாழை, லாவெண்டர், ஸ்நேக் பிளாண்ட், பொத்தேஸ் வளர்க்கின்றோம். இப்பூமியை மாசில்லாத பூமியாக மாற்ற முதலில் நமது நகரை, நமது வீட்டை மாசில்லாததாக மாற்ற வேண்டும். அதற்காகவே இந்த மாடித் தோட்டம் அமைத்தேன்., என்றார்.

மகிழ்ச்சி பெருகும்

செல்வராணி, குடும்பத் தலைவி: முதலில் துளசி, துாதுவளை, வில்வம் போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளை வளர்க்க ஆரம்பித்தேன். எனது கணவர் மலர் செடிகளை வளர்க்க துவங்கினார். எங்களுக்குள் மாடித் தோட்டம் அமைப்பதில் போட்டி ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து தற்போது 50 க்கும் மேற்பட்ட மூலிகை, மலர்கள், காய்கறி செடிகளை வளர்த்து வருகிறோம். இடமில்லை என்பதால் ஜன்னல், மாடிப்படி, சுவர்களிலும் ஆணி அடித்து அதிலும் வளர்க்கிறோம். படுக்கை அறை, வரவேற்பறையிலும் கற்றாழை, அழகு பூச்செடிகள் அமைத்து உள்ளோம். குறிப்பாக படுக்கை அறையில் சுவாசிக்க ஆக்சிஜன் தரும் தாவரங்களை வைத்துள்ளோம். இதன் மூலம் வீட்டில் எப்போதும் ஒரு நல்ல வைப்ரேஷன் இருந்து கொண்டே இருக்கிறது. சுவாசிக்க நல்ல காற்று, சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மூலிகைகள், வீட்டு தேவைக்கேற்ப காய்கறிகள் கிடைக்கிறது. குறிப்பாக மனக்கஷ்டம் இருக்கும்போது பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினால், கோபம் குறைகிறது. மகிழ்ச்சி அதிகரிக்கிறது. இயற்கையாக வாழ, இயற்கையுடன் இணைந்து நிற்க கற்றுக் கொள்ள வேண்டும். கம்பம் நகரை மாசில்லாதாக மாற்ற ஒவ்வொருவரும் இது போன்று வீடுகளில் தோட்டம் அமைக்கலாம். அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ