உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது குடிக்க பணம் தராத சகோதரியின் மகனை அடித்து கொன்ற நபர் போதை தெளிந்ததும் துாக்கிட்டு தற்கொலை

மது குடிக்க பணம் தராத சகோதரியின் மகனை அடித்து கொன்ற நபர் போதை தெளிந்ததும் துாக்கிட்டு தற்கொலை

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பாண்டீஸ்வரன் 30, மது குடிக்க பணம் தராத சகோதரி ஆனந்தி 43, அவரது மகன் நிஷாந்த் 13, ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் நிஷாந்த் பலியானார். போதை தெளிந்து பின் தாக்கிய பாண்டீஸ்வரனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கீழவடகரை அழகர்சாமிபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. மகன் நிஷாந்த். 8 ம் வகுப்பு படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்தார். ஆனந்தி சித்தாள் வேலை செய்து தனது மகனை படிக்க வைத்துள்ளார். ஆனந்தியின் தம்பி பாண்டீஸ்வரன் 'சென்ட்ரிங்' வேலை செய்து, தனது சகோதரியுடன் தங்கியுள்ளார். திருமணமாகவில்லை.மது போதைக்கு அடிமையான பாண்டீஸ்வரன், நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த தனது சகோதரியை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனந்தி பணம் இல்லை என்றார். இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் ஆனந்தியை தாக்கியதில் மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு எழுந்த நிஷாந்த்தையும் கம்பியால் பாண்டீஸ்வரன் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே நிஷாந்த் பலியானார். மதுபோதையில் பாண்டீஸ்வரன் படுத்துவிட்டார்.நேற்று அதிகாலை போதை தெளிந்த பாண்டீஸ்வரன், காயமடைந்த அக்காவும், அவரது மகனும் இறந்துவிட்டனர் என நினைத்து வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வீட்டருகே உள்ளவர்கள் ஆனந்தியை வேலைக்கு கூப்பிடச்சென்ற போது ரத்த வெள்ளத்தில் காயங்களுடன் ஆனந்தி முனங்கியுள்ளார். அவரை மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விரல் ரேகை, தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ