500 உடலுறுப்புகள் தானம் பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு
தேனி: 'மாநிலத்தில் 500 உடலுறுப்புகள் தானங்கள் பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது,' என அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான ரூ.22.21 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்று அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் 2023 செப்.23ல் உடலுறுப்பு தான தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. இதுவரை மாநிலத்தில் 500 உடலுறுப்பு தானங்கள் பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. மாநிலத்திலேயே தேனி முதல் மாவட்டமாக விருது பெற்றது. இதயம் காப்போம் திட்டம் தமிழகத்தில்உள்ள 10,999 மருத்துவ கட்டமைப்புகளிலும் பயன்பாட்டில் உள்ளது. இதில் மூன்று மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.இதன் மூலம் ஊரக பகு திகளில் மாரடைப்பால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர். தேனி மாவட்டத்தில் இதய பாதிப்புகள் குறைவாக உள்ளது என்றார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள கதிரியக்கவியல்துறையில் கூடுதலாக ரூ.2.20 கோடி மதிப்பில் புதிய சி.டி.ஸ்கேன் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங், மருத்துவக்கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், போடி தி.மு.க., மேற்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயணபாண்டியன், துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமரன் ஆகியோர் பங்கேற்றனர்.