பொதுப்பாதையை மீட்டு தர கோரி கிராமத்தினர் மனு குறைதீர் கூட்டத்தில் குவிந்த மக்கள்
தேனி: இலவச வீட்டுமனை பட்டா கேட்டு குமணன்தொழு கிராம பொதுமக்கள், பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஊஞ்சாம்பட்டி ஊராட்சி டெலிபோன் நகர் குடியிருப்போர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்டவழங்கல் அலுவலர் மாரிச்செல்வி, சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நேரு உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.ஆண்டிபட்டி தாலுகா குமணன்தொழு பாலசுப்பிரமணியன், முத்து, செல்வம் தலைமையில் கிராமத்தினர் வழங்கிய மனுவில், ' கிரமாத்திற்கு உட்பட்ட பகுதியில் பல ஆண்டுகளாக வரி செலுத்தியும், மின் இணைப்பு பெற்றும் வசிக்கிறோம்.எங்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.ஊஞ்சாம்பட்டி ஊராட்சி டெலிபோன்நகர் பொதுமக்கள் சரவணக்குமார் வழங்கிய மனுவில், 'குடியிருப்பு பகுதியில் 25 ஆண்டுகளாக பொதுப்பாதையை ஆக்கிரமித்து இடையூறு செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர். 2012 முதல் 2022 வரை நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று, 2024ல் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன தேர்விலும் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்கள் சபிதாராணி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், 'பணிநியமனத்தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும். முதல்வரிடம் இந்த கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டும்,' என இருந்தது.பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டி ஸ்ரீராம் நகர் பொதுமக்கள் மனுவில், 'இங்கு மூன்று தலைமுறைகளாக வீடுகட்டி குடியிருந்து வருகிறோம். இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் விஷ பூச்சிகளால் பாதிக்கும் ஆபத்து உள்ளது. வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்,' என இருந்தது. ஆண்டிபட்டி தாலுகா அன்னை இந்திராநகர் இளஞ்செழியன் வழங்கிய மனுவில், 'எனது மகள் இரு ஆண்டுகளுக்கு தேசிய திறனறித்தேர்வில் வெற்றி வெற்றார். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. எனது மகளுடன் தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனது மகளுக்கு வழங்கப்படவில்லை. அவருக்கும் உதவித்தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இருந்தது. உடலில் மண்ணெண்ணை ஊற்றிகொண்ட பெண்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் சோதனை செய்து கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பினர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் ஒரு பெண் திடீரென பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றினார். பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் அவரை தடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அப்பெண் கெங்குவார்பட்டி கனிப்பிரியா 35, என தெரிவித்தார். அவரது கணவர் அரசு அலுவலகத்தில் டிரைவாக பணிபுரிகிறார் என்றும், குடும்ப பிரச்னை காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் வழக்கு நிறைவடையாததாலும், ஜூவனாம்சம் தராமலும் கணவர் உள்ளதாக போலீசாரிடம் பெண் தெரிவித்தார்.