ஒரு நாளைக்கு 5 பேர் மீது சந்தேக கேஸ் பதிவு செய்ய உத்தரவு புதிய நடைமுறையால் போலீசார் புலம்பல்
கம்பம் : ஒரு நாளைக்கு குறைந்தது 5 பேர்களை சந்தேக கேஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேனியில் புதிதாக பொறுப்பேத்துள்ள எஸ்.பி. ஸ்நேகா ப்ரியா உத்தரவால் போலீசார் புலம்பி வருகின்றனர். போலீஸ் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தேக கேஸ் போடும் பழக்கம் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது மறைந்து விட்டது. தற்போது தேனி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., ஸ்நேகா ப்ரியா பிறப்பித்துள்ள உத்தரவால் போலீசார் புலம்ப துவங்கியுள்ளனர். அதாவது,' தினமும் இரவு நேர ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் தங்கள் கையுடன் கைரேகை பதிவு செய்வதற்கான ரிக்கார்டுகள் மற்றும் இங்க் பேடு, டி.எஸ்.ஆர். புத்தகம் போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இரவு ரோந்து பணிக்கு செல்பவர்கள் குறைந்தது 5 நபர்களை பிடித்து , அவர்களிடம் கைரேகையை பதிவு செய்து, சந்தேக வழக்கு பதிவு செய்து அனுப்பி வைக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார். இது நடைமுறைக்கு சாத்தியப் படாதது என புலம்புகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், காலை 6:௦௦ மணி வரை கஷ்டடியில் வைத்திருந்ததாக டி.எஸ்.ஆர். பதிவு செய்து அவர்களை கைரேகை எடுத்து அனுப்பி விடுகிறோம். அவர்கள் சென்று வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே இந்த நடைமுறையை கைவிட எஸ்.பி. உத்தரவிட வேண்டும், என்கின்றனர்.