உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறையுங்க சார்: போராட தயாராகும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்

பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை குறையுங்க சார்: போராட தயாராகும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்

கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. பி.டி.ஆர்.,வாய்க்கால் மூலம் 5,100 ஏக்கர் ஒரு போக பாசனம் நடைபெறுகிறது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் , திண்டுக்கல் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் வரை முல்லைப் பெரியாறு பாசனம் நடைபெறுகிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக சாகுபடிக்கு முன்னுரிமை வழங்க ஆயக்கட்டு விதிமுறைகள் உள்ளன. இதை நீர்வளத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்கின்றனர் விவசாயிகள். கம்பம் பள்ளத்தாக்கில் இரண்டாம் போகத்திற்கான நடவு பணி துவங்கி விட்டது.தற்போது அணைநீர் மட்டம் 123.25 அடியாக உள்ளது. விநாடிக்கு 765 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1100 கன அடி விடுவிக்கப்படுகிறது. வைகை அணை மொத்த கொள்ளளவு 71 அடி. தற்போது 61.17 அடி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1164 கன அடி வரத்தும், அணையிலிருந்து விநாடிக்கு 3199 கனஅடியும் விடுவிக்கப்படுகிறது.விவசாயிகள் எதிர்ப்பு: பெரியாறு அணைக்கு வடகிழக்கு பருவ மழையில் அதிக நீர்வரத்து இருக்காது. தென்மேற்கு பருவ மழை காலத்தில் தான் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த நிலையில் பெரியாறு அணையில் இருந்து 1100 கன அடி தண்ணீர் எடுப்பதற்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீர் எடுப்பதை குறைக்க கோரி மதுரை நீர் வளத் துறை தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்களை சந்தித்து வலியுறுத்தினர். ஆனால் பலன் இல்லை. தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.ஆலோசனை கூட்டம்: இது குறித்து விவாதிக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க அவசர கூட்டம் உத்தமபாளையத்தில் தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அணையின் நீர் மட்டம் 123 அடி மட்டுமே உள்ளது . மழை குறைந்து வரத்தும் அதிகம் இல்லை. கம்பம் பள்ளத்தாக்கில் 2ம் போக நடவு பணிதுவங்கி உள்ளோம். இதற்கு நீர் இருப்பை உறுதி செய்வது நீர்வளத்துறையின் பொறுப்பாகும். உடனடியாக அணையில் இருந்து 1100 கன அடி நீர் எடுப்பதை குறைக்க வேண்டும். தவறினால் விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. என கருத்து தெரிவித்தனர்.செயலாளர் சகுபர் அலி, கருங்கட்டான்குளம் விவசாயிகள் சங்க தலைவர் விஜயராஜன், கம்பம் தலைவர் நாராயணன், செயலாளர் சுகுமாறன், நீரினை பயன்படுத்துவோர் நிர்வாகி ராமகிருஷ்ணன்,சின்னமனூர் தலைவர் ராஜா, சீலையம்பட்டி ஆம்ஸ்ட்ராங் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை