தைப்பொங்கலுக்கு செங்கரும்பு தயார் கொள்முதல் விலை அதிகரிக்க கோரிக்கை
சின்னமனூர்: சின்னமனூரில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கான செங்கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. அரசின் கொள்முதல் விலையை அதிகரித்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் சின்னமனூர், பெரியகுளம், தேவதானப்பட்டி, தேனி ஆகிய ஊர்களில் செங்கரும்பு சாகுபடி நடைபெறுகிறது. சின்னமனூரில் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. நடவு செய்து அறுவடை செய்ய ஓராண்டாகும். ஓராண்டில் நெல் சாகுபடி என்றால் இரு போகம் மகசூல் பெறுவார்கள். ஆனால் செங்கரும்பிற்கு சாகுபடி காலம் ஓராண்டாகிறது . போதிய அளவு லாபம் கிடைப்பதால் தான் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர். பொங்கலுக்கு விலையில்லா கரும்பு அரசு வழங்குவதால் அந்தத்த மாவட்டங்களில் கொள்முதல் செய்கின்றனர். தேனி மாவட்டத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஒரு கரும்பு ரூ.35க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கூட்டுறவு மற்றும் வேளாண் துறைகள் இணைந்து இப் பணியை செய்தனர். இந்தாண்டு செங்கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர். கடந்தாண்டை விட மகசூல் செலவுகள் அதிகரித்திருப்பதால், இந்தாண்டு ஒரு கரும்பு ரூ.40 க்கு கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.