இரண்டாவது டபுள் டெக்கர் பஸ் பயன்பாட்டுக்கு வந்தது
மூணாறு: மூணாறில் இரண்டாவது ' டபுள் டெக்கர்' பஸ் நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. மூணாறின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ' ராயல் வியூ டபுள் டெக்கர்' எனும் திட்டத்தில் ' டபுள் டெக்கர்' பஸ் சேவை கடந்தாண்டு பிப்.8ல் பயன்பாட்டுக்கு வந்தது. பஸ் சுற்றிலும், மேல் கூரையும் கண்ணாடி இழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் பஸ்சில் பயணித்தவாறு சுற்றுச் சூழலை ரசித்து வருகின்றனர். பயணிகள் இடையே ' டபுள் டெக்கர்' பஸ்க்கு நன்கு வரவேற்பும், வருவாயும் கிடைத்ததால் மேலும் ஒரு ' டபுள் டெக்கர்' பஸ் நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது.தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார். பழைய மூணாறில் உள்ள அரசு பஸ் டிப்போவில் இருந்து தினமும் காலை 8:00, 11:30, மாலை 3:00 மணிக்கு புறப்படுகிறது. ஏற்கனவே உள்ள பஸ் காலை 9:00, மதியம் 12:30, மாலை 4:00 மணிக்கு இயக்கப்படுகிறது. கட்டணம், வழித்தடம் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. வழித்தடம்: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனயிறங்கல் அணை வரை பஸ் சென்று திரும்பும். அந்த வழியில் கேப் ரோடு, பாறைகுகை, பெரியகானல் நீர்வீழ்ச்சி, ஆனயிறங்கல் அணை ஆகியவற்றை ரசிக்கலாம்.இரண்டு பஸ்களிலும் கீழ் தளத்தில் 12, மேல் தளத்தில் 38 என 50 இருக்கைகள் உள்ளன. நபர் ஒன்றுக்கு கீழ் தளத்தில் ரூ.200, மேல் தளத்தில் ரூ.400 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.