மாணவர்கள் சேர்க்கை துவக்கம்
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99 உள்ளன. இவற்றில் சுமார் 100 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 20க்கும் குறைவாக உள்ளது. மாணவர்கள் சேர்க்கை இன்றி சில பள்ளிகள் மூடுவிழா காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை அரசு பள்ளிகள் துவங்கி உள்ளன. இதன்படி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக வீடுகள் தோறும் செல்ல ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கும் சலுகைகள், திட்டங்கள் பற்றி எடுத்துரைக்க கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக புகைப்படங்கள், விவரங்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.