50 சதவிகித பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இன்றி மாணவர்கள் பரிதவிப்பு
தேனி: ''மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் செயல்படுத்தபட்ட சில திட்டங்கள், அமைக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாடின்றி பலகோடி மதிப்பிலான நிதி விணாகி வருகிறது. பயன்பாடின்றி உள்ள கட்டடங்கள், திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், 265 அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்சிப் பொருளான சமுதாய கூடம்
தேனி முத்துத்தேவன்பட்டியில் 3300 சதுர அடியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.13.14 கோடியில் முழுவதும் குளிரூட்டப்பட்ட சமுதாய கூடத்தை முதல்வர் ஸ்டாலின் 2023 ஏப்.,ல் திறந்து வைத்தார். இந்த 2 ஆண்டுகளில் 3 அரசு நிகழ்ச்சிகள் மட்டும் இந்த சமுதாய கூடத்தில் நடத்தப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்படும் வாரிய குடியிருப்புகள்
தேனி அருகே வடவீரநாயக்கன்பட்டியில் ரூ.31.17 கோடியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 312 அடுக்குமாடி குடியிருப்புகள், வீரபாண்டு தப்புக்குண்டு அருகே ரூ.43.2 கோடி மதிப்பில் 431 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த குடியிருப்புகளுக்கு இதுவரை 50 சதவீத பயனாளிகள் கூட தேர்வாகவில்லை. போதிய போக்குவரத்து வசதி, பாதுகாப்பு இல்லை என கூறி பொது மக்கள் இந்த குடியிருப்புகளை புறக்கணித்து வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்புகளில் தற்போது வசிப்பவர்கள் குடிநீருக்கு தனியாக செலவு செய்யும் சூழல் உள்ளது. விளையாட மைதானங்கள் தேவை
மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி 70, உயர்நிலைப்பள்ளி 36, தொடக்கப்பள்ளிகள் 325, நடுநிலைப்பள்ளிகள் 99 என மொத்தம் அரசுப் பள்ளிகள் 530 உள்ளன. இவற்றில் 50 சதவீத பள்ளிகளில் கூட (265 அரசு பள்ளிகளில்) விளையாட்டு மைதானங்கள் இல்லை. இதனால் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பதிலும், தங்களது விளையாட்டு திறன்களை வளர்ப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 'மினி ஸ்டேடியங்கள்' எப்போது
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டத்தில் கம்பம் சட்டசபை தொகுதியில் கோம்பையில் மட்டும் மினி ஸ்டேடியம் அமைய உள்ளது. ஆண்டிபட்டி, போடி சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் இடம் தேர்வு பணிகள் கூட முடியவில்லை. இவற்றை துணை முதல்வர் கவனத்தில் கொண்டு மினி ஸ்டேடியங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.