ரூ.32.5 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை தேனி புத்தக திருவிழா நிறைவு
தேனி : தேனியில் நடந்த 3ம் ஆண்டு புத்தக திருவிழாவில் ரூ.32.5 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை ஆகியது.நேற்றுடன் புத்தக திருவிழா நிறைவு பெற்றது.தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பழனிசெட்டிபட்டி மேனகா மில் மைதானத்தில் புத்தக திருவிழா மார்ச் 23ல் துவங்கியது. இந்த விழா நேற்று நிறைவடைந்தது. தினமும் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், சிந்தனை அரங்கம், இலக்கிய அரங்கம் நடந்தது. இதில் உள்ளூர், பிரபல பேச்சாளர்கள் பேசினர். 60க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த புத்தக திருவிழா மாவட்டத்தை சேர்ந்த புத்தக வாசிப்பாளர்களுக்கு வரமாக அமைந்தது. பல்வேறு தலைப்புகளில் விற்பனைக்கு இருந்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.100, ரூ.200 மதிப்பிலான டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. அதனை பயன்படுத்தி மாணவர்கள் பலர் புத்தகங்களை வாங்கி சென்றனர். சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் கைதிகள் படிக்க மாணவர்கள் புத்தகங்களை வழங்கினர். பத்து நாட்கள் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.32.5 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனையாகின.