தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பிடிவாரன்ட் தேனி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
தேனி: தேவதானப்பட்டியில் பேரூராட்சி கடை ஏலம் எடுத்தவருக்கு கடையை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திய பேரூராட்சி செயல் அலுவலருக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபாரதம் விதித்தது.அதனை செயல்படுத்தாத செயல் அலுவலருக்கு தேனி நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் 2017 ல் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் ஒரு கடையை ஏலம் எடுத்தார்.அதற்கான தொகை, வாடகை பணத்தை செலுத்தினார். ஆனால், நிர்வாகம் கடையை அவரிடம் ஒப்படைக்கவில்லை. இதனால் தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் 2024 ஏப்.,ல் நடந்த விசாரணையில், ராமசந்திரனுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியது, வழக்கு செலவு என ரூ.65 ஆயிரம் இழப்பீடு வழங்க பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், பேரூராட்சி நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை கண்டு கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் ராமசந்திரன் நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், பேரூராட்சி செயல் அலுவலரை நவ.,11ல் நேரில் ஆஜர் படுத்தவும், செயல் அலுவலரை பினையில் வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.