மகசூலை அதிகரிக்க நவீன வேளாண் கருவி கண்டுபிடித்த தேனி இளைஞர் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் கிருமிகளையும் கண்டறிய முயற்சி
தேனி:வேளாண் மகசூலை அதிகரிக்கவும், தண்ணீர், உரங்களை சிக்கனப்படுத்த நவீன கருவிகளை கண்டுபிடித்துள்ள தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தை சேர்ந்த இளைஞர் செல்வ விநாயகம் 30, நெல் பயிர்களில் காற்றில் பரவும் கிருமிகளை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த செல்வவிநாயகம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் தற்போது வேளாண் துறையில் நோய்களை முன்னரே கண்டறிதல், மண்ணில் உள்ள சத்துக்கள், ஈரப்பதம் அளவை கண்டறிந்து, தேவையான அளவிற்கு உரம், தண்ணீர் வழங்கும் கருவிகள், காற்றில் நோய் பரப்பும் கிருமிகளை கண்டறிந்து வருகிறார். புதிய கண்டுபிடிப்புகள் பற்றி செல்வவிநாயகம் கூறியதாவது: குறிப்பிட்ட இடத்தில் வானிலையை கண்டறியும் தானியங்கி வானிலை கருவியை சில தோட்டங்களில் பொருத்தி உள்ளேன். அதற்காக தனி செயலியும் வடிவமைத்துள்ளேன். இதன் மூலம் வெப்பநிலை, சாகுபடி செய்த பயிர்களில் என்ன நோய் தாக்குதல்கள் இருக்கும் என்பதை செயலி மூலம் விவசாயிகளுக்கு முன்பே தெரிவிக்கும். இதனால் முன்கூட்டியே நோய் தடுப்பு முறைகள் மேற்கொள்ளலாம். செயற்கை கோள் வரைபடம் மூலம் குறிப்பிட்ட வயலில் பயிர்கள் வெளியிடும் அல்லது உட்கிரகிக்கும் அலைகதிர் வீச்சு அடிப்படையில் நோய் தாக்கங்கள்பற்றி செயலியில் கண்டறியலாம். நெல் வயல்களில் அறுவடைக்கு முன்பு வரை எப்போதும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு நீர் இருப்பதை உறுதி செய்யசென்சார், ஐ.யு.டி.,சிம் பொருத்திய கருவி வடிவமைத்துள்ளேன். இது வயலில் தண்ணீர் குறையும் போது விவசாயிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பும். நிலத்தில் என்.பி.கே., உள்ளிட்ட சத்துக்களை கண்டறியும் கருவி,நெல் பயிரில் காற்றில் பரவும் நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளை கண்டறியும் மைக்ரோஸ்கோப்புடன் கூடிய கருவியை வடிவமைத்துள்ளேன். இந்த இரு கருவிகளை கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆலோசனை பெற்று மேம்படுத்தி வருகிறேன். இக்கருவிகள் குறைந்த செலவு, அனைவரும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும். இதனால் நெல்வயலில் தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படும். கூடுதல் மகசூல், தேவைக்கு ஏற்ப உரம் வழங்கலாம். எனது ஆய்வுகளுக்கு சகோதரர் நிரஞ்சன்குமார், பேராசிரியர் ரமேஷ்குமார், எம்.எஸ்.,சுவாமிநாதன் ஆய்வு அறக்கட்டளை நிர்வாகி முகிலன் உள்ளிட்டோர் உதவுகின்றனர் என்றார்.