வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
ஆண்டிபட்டி: வைகை அணை பூங்காவில் சுற்றுலா வரும் பயணிகள், பொழுதுபோக்கும் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி மகிழ்ச்சி அடைகின்றனர்.தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை மற்றும் பூங்கா உள்ளது. கேரளா மற்றும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் வைகை அணையின் அழகை பார்க்க தவறுவதில்லை. தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பரந்து விரிந்த நீர் தேக்கம், வைகை அணையின் வலது, இடது கரைகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பூங்காக்கள் முதல் முறையாக வைகை அணைக்கு வந்து செல்பவர்களுக்கு பிரமிப்பாக அமைகிறது. கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத வைகை அணை பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தருவதாக இருந்தது. இந்நிலையில் வைகை அணையின் வலது, இடதுகரை பூங்காக்களில் தற்போது தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் கொலம்பஸ் ராட்டினம், கப் ரெய்டு, கார் ரேஸ், பலூன், ஜம்பிங் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் செயல்படுகின்றன. வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் இப்பகுதியில் சில மணி நேரம் குதூகலமாக கழிக்கின்றனர். வைகை அணை பூங்காவில ரூ.5 நுழைவுக் கட்டணமாகவும், ராட்டினம் பொழுதுபோக்கும் உபகரணங்களில் ஒரு முறை ஏறி இறங்க ரூ.30 முதல் 50 வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.