உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் நகருக்கான அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைக்குமா; குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் சிரமம்

கோயில் நகருக்கான அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீடு கிடைக்குமா; குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் சிரமம்

உத்தமபாளையம்,: கோயில் நகரான குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி பக்தர்கள் அவதிப்பட்டு வருவதால் கோயில் நகரம் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கி வசதிகள் மேம்படுத்த பக்தர்கள் கோரியுள்ளனர்.குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இது சுயம்புவாக சனீஸ்வரபகவான் எழுந்தருளியுள்ள தலமாகும். தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையன்று இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந் திருவிழா சிறப்பாக நடைபெறும். பெருந்திருவிழாவில் மாநிலம் முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வருவார்கள். ஆடிப் பெருந் திருவிழாவில் சனீஸ்வர பகவான் - நீலாதேவி திருக்கல்யாணம் முக்கிய நிகழ்வாகும். மூன்றாவது சனிக்கிழமை பெருந் திருவிழாவாக கொண்டாடப்படும்.இவ்வளவு சிறப்பு பெற்ற ஆன்மிக தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாகும். முகம் சுளிக்கும் பக்தர்கள்சுரபி நதியில் நீராடி, கரையில் உள்ள விநாயகரை தரிசித்து பின் சனீஸ்வரரை தரிசிப்பார்கள். அந்த சுரபி நதி மாசுபட்டுள்ளது. பக்தர்கள் குளித்து விட்டு, விட்டுச் செல்லும் உடைகள் மற்றும் கழிவுப் பொருங்கள் தண்ணீரில் மிதக்கும். கரையோரத்தில் முடி காணிக்கை செலுத்துவது, காக்கை வாகனம் வாங்கி வைப்பது, விளக்கு ஏற்றுதல் போன்றவற்றிற்கு போதிய வசதிகள் இல்லை. கோயில் வளாகத்திலிருந்து இருந்து சுரபி நதிக்கரையை அடைய அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்துள்ளது. பெண் பக்தர்கள் குளித்து விட்டு உடை மாற்ற அறைகள் இல்லை. வெளியூர்களில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இயற்கை உபாதைகளை போக்க போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லை.தரிசனம் முடிப்பதற்கு முன்னும், தரிசனம் முடிந்த பின்னும் பல சிரமங்களை வெளியூர் பக்தர்கள் சந்திக்கின்றனர்.கோயில் வருவாயை அனுபவிக்கும் ஹிந்து சமய அறநிலைய துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர முன் வருவதில்லை.எனவே, பிரசித்தி பெற்ற குச்சனுாருக்கு கோயில் நகரம் என்ற அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து அரசு வழங்கி அடிப்படை வசதிகள் மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரியுளளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை