உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை உறவினர்கள் மறியல்

அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி:கட்டணம் செலுத்தாததால் சக மாணவர்கள் முன் அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்த 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருநெல்வேலி சாந்திநகர் நாகராஜன். கட்டுமான நிறுவன சூப்பர்வைசர். மனைவி மாரியம்மாள். இவர்களது மூத்த மகன் நரேன் 14, திருநெல்வேலி மாவட்ட கோர்ட் எதிரே உள்ள பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இளைய மகன் அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். மழை வெள்ளம் காரணமாக வேலை இல்லாததால் நாகராஜனுக்கு வருமானம் இல்லை. நரேனுக்குரிய பள்ளி கட்டணம் செலுத்த தாமதம் ஆனது. ஜன., 2 பள்ளியில் தேர்வு அறையில் இருந்தபோது நரேனை எழுப்பி தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் பள்ளிக்கு வர வேண்டாம் என சக மாணவர்கள் முன்பாக அவமானப்படுத்தியுள்ளனர்.மனமுடைந்த நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் பள்ளி ஆசிரியை போனில் அழைத்து கட்டணம் கொண்டு வருமாறு கூறியுள்ளார். வெள்ள நிவாரணத்துக்கு அரசு கொடுத்த பணம் ரூ.5000 உள்ளது. அதை கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு முழு பணம் ரூ.11 ஆயிரம் கொண்டு வந்தால் தான் பள்ளிக்கு வர வேண்டும். இல்லையென்றால் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். மனமுடைந்த நரேன் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவன் சாவுக்கு காரணமான ஆசிரியை, தாளாளர், நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நரேனின் உறவினர்கள் நேற்று பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், கல்வித் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை