மாமியாரை கொன்ற மருமகன் கைது மனைவியையும் வெட்டிய கொடூரம்
திருநெல்வேலி: திருநெல்வேலி, சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லுாரை சேர்ந்த செல்லப்பா மனைவி வள்ளியம்மாள், 45. இவர்கள் மகள் துர்கா, 25. இவருக்கும், மேலச்செவலை சேர்ந்த ஆறுமுக நயினார், 30, என்பவருக்கும் நான்காண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுக நயினார் கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர். மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி, அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம், மனைவி, குழந்தைகளை நரசிங்கநல்லுாரில் உள்ள மாமியார் வீட்டில் ஆறுமுகநயினார் விட்டு சென்றார். இது குறித்து, மாமியார் வள்ளியம்மாள், அவரிடம் மொபைல் போனில் பேசி திட்டியுள்ளார். இதில், ஆத்திரமுற்ற ஆறுமுக நயினார், நரசிங்கநல்லுார் சென்று வள்ளியம்மாளுடன் தகராறு செய்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற துர்காவையும் வெட்டினார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வள்ளியம்மாள் இறந்தார். துர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுத்தமல்லி போலீசார் ஆறுமுகநயினாரை கைது செய்தனர்.