இரவு நேர சிகிச்சையில் கூடுதல் கவனம் அரசு மருத்துவருக்கு கலெக்டர் அறிவுரை
திருவள்ளூர்:''அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு, மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார்.ஆய்வுக் கூட்டத்தில், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு, புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல சிகிச்சை குறித்தும், எக்ஸ்ரே நுண்கதிர் சேவை மற்றும் ஆய்வக சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன்பின் கலெக்டர் பேசியதாவது:அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவையை குறைவின்றி வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை உரிய முறையில் வழங்க வேண்டும்.மகப்பேறு, மகளிர் நலன் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ் - திருவள்ளூர், பிரபாகரன் - பூவிருந்தவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.