திருத்தணி:முருகன் கோவிலில், நேற்று ஆடிக்கிருத்திகை விழா ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலர், மயில் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்கக்கல், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக சரவணப் பொய்கை குளத்திற்கு வந்து மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். தொடர்ந்து உற்சவர் முருகபெருமான் மீண்டும் மலைக் கோவிலுக்கு சென்றபின், மூலவருக்கு மீண்டும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று நடந்த ஆடி அஸ்வினியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்தும், மலர், மயில் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழியில் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆடிப்பரணி
இன்று ஆடிப்பரணியும், நாளை, 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பக்தி இன்னிசையுடன் உற்சவர் முருகபெருமான் தெப்பலில், மூன்று முறை வலம் வந்து அருள்பாலிப்பார். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் பொறுப்பு அருணாச்சலம் அறங்காவலர்கள் உறுப்பினர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் தலைமையில், 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை உள்ளூர் விடுமுறை
திருத்தணி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை 29ல் ஆடிக்கிருத்திகை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.கருவூலம், சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு 29ல் செயல்பட வேண்டும். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு, ஆக., 10ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.