நீர்வழித்தடங்கள் துார்வாரும் பணியில் திருப்தியில்லை கொந்தளித்த எம்.எல்.ஏ.,க்களால் நீர்வளத்துறை விழிப்பு
சென்னை: வடகிழக்கு பருவ மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிக சேதத்தை சந்திக்கின்றன.பருவமழைக்கு முன்பாக, அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 138 இடங்கள்
நடப்பாண்டு இப்பணிக்கு முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில், 138 இடங்களில் பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இதைத்தொடர்ந்து, மத்திய பகிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய்களை சீரமைக்க, கூடுதலாக 3.50 கோடி ரூபாயும், கூவத்தில் துார்வாரும் பணிக்கு 18 கோடி ரூபாயும் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.அக்., மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், அதற்குள் துார்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். டிசம்பரில் பருவமழை முடிவுக்கு வரும் வரை, நீரோட்டம் பாதிக்காத வகையில் பணிகளை தொடர வேண்டும்.பெரும்பாலான பணிகளை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் எடுத்துள்ளனர். இவர்கள், துார் வாரும் பணியில் உரிய கவனம் செலுத்தவில்லை.வடகிழக்கு பருவமழை துவங்கினால், நீர்வழித்தடங்களில் தேங்கிக் கிடக்கும் ஆகாயத்தாமரை, புதர்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை அடித்துச் சென்றுவிடும்; செலவு குறைந்து அதிக லாபம் கிடைக்கும் என 'கணக்கு' போட்டுள்ளனர்.இதனால், பல இடங்களில் துார் வாரப்படாமல், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. டெங்கு பரவல் வேகம் எடுத்துள்ளதால், மக்கள் நல்வாழ்வு துறையினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் கடந்த 2ம் தேதி வெளியானது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடந்தது. கொந்தளிப்பு
இதில் பங்கேற்று பேசிய திரு.வி.க., நகர் தொகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ., தாயகம் கவி உள்ளிட்டோர், துார்வாரும் பணிகள் முறையாக நடக்கவில்லை என கொந்தளித்தனர்.மழைக்காலத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டாரை உயரமாக வைக்க வேண்டும்; வரும் மழைக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.அப்போது, பணியை விரைவாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜானகி தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர் குழுவினர், அண்ணா நகர், வில்லிவாக்கம், திரு.வி.க.,நகர் உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதையடுத்து, ஒப்பந்த நிறுவனங்கள், 'பொக்லைன்' வாயிலாக பணிகளை மேற்கொண்டனர். அங்கு 'போட்டோ' எடுத்துக்கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் சென்றனர்.
புரிதல் இல்லாத அதிகாரிகள்
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், பிரதான நீர்வழித்தடங்கள் மட்டுமின்றி பல்வேறு கால்வாய்களும் உள்ளன. இவற்றில், எங்கெங்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பது, அங்கு பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் நீர்வளத்துறையினருக்கு நன்கு தெரியும். எனவே, பருவமழை முன்னெச்சரிக்கையாக, இங்கெல்லாம் பணிகள் நடத்தப்படும்.தற்போது, வெளிமாவட்டங்களில் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்கள், அரசியல் செல்வாக்கால், சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். பல கோடி ரூபாய்க்கு இங்கு பணிகள் நடப்பது இதற்கு காரணம். விபரம் தெரிந்த பொறியாளர்கள், 'டம்மி' பதவியில்நியமிக்கப்பட்டு உள்ளனர்.புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகளை பராமரிக்கும் பாலாறு வடிநில வட்டத்தில் முக்கிய பதவியும் காலியாக உள்ளது.இதனால், சென்னையில் உள்ள நீர்வழித்தடங்கள் குறித்த புரிதல் இல்லாமல், புதிய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதனால், வடகிழக்கு பருவமழையை நடப்பாண்டு நீர்வளத்துறை திறமையாக எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.எனவே, இப்பிரச்னையில் தலைமை செயலர் முருகானந்தம், துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரின் செயலர் உமாநாத் தலையிட்டு, தீர்வு காண வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.