ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பொன்னேரியில் பணிகள் மும்முரம்
பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், பொன்னேரி - கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பெரியகாவணம் பகுதியில், எல்.சி., 26 எண் கொண்ட ரயில்வே கேட் உள்ளது.இந்த ரயில்வே கேட் வழியாக புதுவாயல் - சின்னகாணம் நெடுஞ்சாலையில் பயணிக்கிறது. ரயில்கள் தாமதமின்றி பயணிக்கவும், மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், கடந்த, 2022ல் ரயில்வே நிர்வாகம் இங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைத்தது.இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. இதற்காக தமிழக அரசு, 59.26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.நில எடுப்பு பணிகளால், இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தாமதமானது. நிலம் கையப்படுவத்துவது, வீடுகளை அகற்றுவது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன.இந்த இணைப்பு சாலையானது, குண்ணம்மஞ்சேரியில் துவங்கி, பெரியகாவணம் பகுதியில் முடிகிறது. பாலத்தின் இருபுறமும், 20 துாண்களுடன், 826 மீ. நீளம் , 31.5 மீ. அகலத்தில் இணைப்பு சாலை அமைகிறது.துாண்கள், பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை, மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்ட பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு உள்ளது.