லாரியில் அடைக்கப்பட்ட 24 மாடுகள் மீட்பு
திருவள்ளூர்: செங்குன்றத்தில் இருந்து கேரளாவுக்கு கன்டெய்னர் லாரியில், காற்றோட்ட வசதியின்றி அடைத்து செல்லப்பட்ட 24 மாடுகள் மீட்கப்பட்டன.செங்குன்றத்தில் இருந்து கேரளாவுக்கு நேற்று முன்தினம் ஒரு கன்டெய்னர் லாரியில், 24 மாடுகள் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த, கடம்பத்துாரைச் சேர்ந்த, விலங்குகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த கார்த்திக், 38, இவர் போளிவாக்கம் அருகே, லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 24 மாடுகள், குடிநீர், உணவு மருத்துவம் மற்றும் காற்றோட்டம் வசதியின்றி, அடைத்து வைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்படி மணவாளநகர் போலீசார், கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து, 24 மாடுகளையும் மீட்டு, போந்தவாக்கத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மேலும், மாடுகளை கொண்டு சென்ற, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ், 45, இளையராஜா, 40, தரணிதரன், 24, தீனதயாளன், 43, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.