பாரதி நகர் பூங்காவில் உரக்குடில் குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தி
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதியில், வீடுகளுக்கு அருகே உள்ள பூங்காவில், குப்பை பிரித்து உரமாக்கும் குடில் அமைத்ததால், பகுதிவாசிகள் அதிருப்தியடைந்து உள்ளனர்.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 65,000 பேர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் குப்பையை சேகரிக்க, நகராட்சி மற்றும் தனியார் என, 183 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த 2017- - 18ல் திருவள்ளூர் நகராட்சியில், 17 இடங்களில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பையை தரம் பிரித்து, உரமாக்கும் மையம் செயல்படுத்தப்பட்டது. தற்போது, இந்த உரக்குடில்கள் அனைத்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.திருவள்ளுர் நகராட்சி, 13வது வார்டு செந்தில் நகரில், உரக்குடில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் அமைக்காமல், அதே வார்டில் உள்ள பாரதி நகர் பூங்காவில் உரக்குடில் அமைக்கப்பட்டது.இதற்கு, அப்பகுதி வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தற்போது, உரக்குடில் செயல்பாட்டில் இல்லை. மேலும், துர்நாற்றம் வீசுவதால், அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, பாரதி நகர் பூங்காவில் அமைக்கப்பட்ட உரக்குடிலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.