போலி இறப்பு சான்று வழங்கிய வி.ஏ.ஓ., மீது தாசில்தார் புகார்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரகு மகன் விக்னேஷ், 24. இவரது தாய், ஜானகி என்கிற லட்சுமி, 50, என்பவர் இறந்ததாக தெரிவித்து, இறப்பு சான்று பெற, அப்போதைய ஆத்துப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் மனு அளித்தார்.அதே ஆண்டு மார்ச் மாதத்தில், இறப்பு சான்றை கிராம நிர்வாக அலுவலர் ராஜா வழங்கியுள்ளார். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி போலீசில் நேற்று ஒரு புகார் அளித்தார்.அந்த புகாரில், 'உயிருடன் இருக்கும் நபருக்கு இறப்பு சான்று வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராஜா மீதும், இறப்பு சான்று கேட்டு மனு அளித்த விக்னேஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின்படி, வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.