ஸ்ரீகாளிகாபுரத்தில் வீணாகும் கிராம சேவை மையம்
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரத்தில், 15,000 பேர் வசித்து வருகின்றனர். ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில், ஸ்ரீகாளிகாபுரம், ஸ்ரீகாளிகாபுரம் காலனி, அமுதாரெட்டிகண்டிகை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த ஊராட்சிக்கு பொது சேவை வழங்க, கிராம சேவை மைய கட்டடம், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஸ்ரீகாளிகாபுரம் அரசு தொடக்கப் பள்ளி எதிரே கட்டப்பட்ட இந்த கட்டடம், இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. பயன்பாட்டிற்கு வராத இந்த கட்டடத்தில் சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன. இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள், இங்கு மது அருந்துகின்றனர். பள்ளி அருகே இத்தகைய செயல்கள் நடப்பதால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கிராம சேவை மையம் செயல்பாட்டிற்கு வந்தால், வெளிநபர்கள் நடமாட்டம் இங்கு இருக்காது. உரிய பாதுகாப்பும் கிடைக்கும். பகுதிவாசிகளின் அடிப்படை தேவையை நிறைவேற்ற ஊராட்சி சார்பில் கட்டப்பட்ட இந்த சேவை மையம், சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.