பூண்டிக்கு 10,300 கன அடி நீர்வரத்து வெளியேற்றம் 16,500 கன அடி
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கியமானது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.மழைநீர், கிருஷ்ணா நீர், கிருஷ்ணாபுரம் அணைக்கட்டு மற்றும் காவேரிப்பாக்கம், கேசாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் முக்கிய நீர் ஆதாரம். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பெய்த பலத்த மழையால், நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு, 16,500 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது.மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து காரணமாக நிறைந்த பூண்டி நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை கருதி, 12 மதகுகள் திறக்கப்பட்டு, 16,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.நேற்று முதல், மழை நின்றதால், நீர்வரத்து குறைந்து வினாடிக்கு, 10,300 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும், வெளியேற்றப்படும் நீரின் அளவு மாறாமல், 16,500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.